மீனம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
சமநிலை (65/100)
உங்கள்
ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் குரு, ராகுவும், ஆறாம் இடத்தில் சனி
பகவானும் அனுகூல பலன் தரும் வகையில் உள்ளனர். இதே கிரகங்கள் வருட
பிற்பகுதியில் சாதக குறைவான இடங்களில் அமர்ந்து செயல்படுவர். இதனால்
வாழ்வில் முன்னேற்றமும் சிரமமும் சமஅளவில் கலந்திருக்கும்.
சாமர்த்தியமாக
பேசி காரியம் சாதித்து கொள்வீர்கள். பணவரவு சேமிக்கும் அளவு கிடைக்கும்.
பூர்வ சொத்தில் வளர்ச்சியும், புதிய சொத்து வாங்குவதுமான நன்னிலை உண்டு.
புத்திரர்கள் தகுதி, திறமையை வளர்த்து படிப்பிலும், பொது அறிவிலும்
முன்னேற்றம் பெறுவர். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்து
சிறந்த வாழ்வு நலம் பேணுவர். உடல்நலம் நன்றாக இருக்கும். வீடு, வாகன
வகையில் பராமரிப்பு செலவு, திருட்டு காரணமாக பணஇழப்பு ஏற்படும். மே, ஜூன்,
ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகாரவக்ரகதியாக கும்பராசியில் அமர்வு
பெறுகிறார். இந்த சமயங்களில் செயல்களில் தடுமாற்றம், கூடுதல் செலவு,
உடல்நலக்குறைவு போன்ற எதிர்மறை பலன்கள் ஏற்படும். வெளிநாடு வேலை
வாய்ப்புக்கு முயற்சித்தால் தடங்கல் ஏற்படும்.
தொழிலதிபர்கள்:
கல்வி, நிதிநிறுவனம், தொழிற்பயிற்சி கல்லூரி, சிமென்ட் ஆலை அதிபர்களும்,
ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிகல்,
மின்னணுசாதனங்கள், தங்கநகை, உணவு பண்டங்கள், சமையல் எண்ணெய், தண்ணீர்
சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் சிறப்பான வளர்ச்சியும்,
தாராள பணவரவும் பெறுவர். அபிவிருத்தி பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும்.
வருடத்தின் முற்பகுதியில் சுறுசுறுப்பாக செயல்புரிந்து அதற்கு உரிய
ஆதாயபலனை கணிசமாக பெறுவீர்கள். பிற்பகுதியில் தொழிலில் தேக்கம் ஏற்படவும்
லாபம் குறையவும் வாய்ப்புண்டு. மே, ஜூன், ஜூலை மாதங்களில் சுபச்செலவு
அதிகரிக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை,
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஸ்டேஷனரி, மாவு, பர்னிச்சர், எலக்ட்ரிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ், பெயின்ட், விவசாய இடு பொருட்கள், மருந்து, தானியம்,
உடற்பயிற்சி கருவி, மீன், இறைச்சி, அலங்காரப் பொருட்கள், காகிதப்
பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் அபிவிருத்தி காண்பர்.
தாராள பணவரவு கிடைக்கும். அபிவிருத்தி பணிகள் எளிதாக நிறைவேறும். மே,
ஜூன், ஜூலை மாதங்களில் வியாபாரத்தில் கவனக்குறைவு ஏற்படும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை
கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை பூர்த்தி செய்வர். இதனால், தாராள பணவரவு
கிடைத்து சேமிப்பு வளரும். குறிப்பாக கல்வித்துறை, நிதி நிறுவனங்களில்
பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி
வருமானம் பெறுவர். பதவி உயர்வு, சலுகைகள் எளிதாக கிடைக்கும். சக
பணியாளர்களுடன் நட்புறவு வளரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பணியில்
குறுக்கீடு வரும். துணிவுடனும், சமயோசிதமாகவும் செயல்படுவதால் சிரமங்களை
தவிர்க்கலாம்.
மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம்,
ஆசிரியர் பயிற்சி, நிதிமேலாண்மை, பிசினஸ் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர்,
அனிமேஷன், இலக்கணம், இலக்கியம், ஜர்னலிசம், இசை, சினிமா தொழில்நுட்பம்,
ஓவியம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள், லட்சிய
மனப்பான்மையுடன் செயல்பட்டு தரத் தேர்ச்சி பெறுவர். படிப்பிற்கான பணவசதி
நிறைவாக கிடைக்கும். சகமாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். மே, ஜூன்,
ஜூலை மாதங்களில் சிறிதளவு கவனக்குறைவும், ஆடம்பர பொருட்களை வாங்குவதில்
ஆர்வமும் இருக்கும்.
பெண்கள்: அரசு, தனியார்
துறையில் பணிபுரிபவர்கள், தகுதி, திறமையை நன்கு பயன்படுத்தி பணியை
சிறப்புற நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை எளிதாக
கிடைக்கும். வருட பிற்பகுதியில் பணியில் விழிப்புணர்வுடன் செயல்பட
வேண்டும். குடும்ப பெண்கள், கணவரின் நல் அன்பும் தேவையான பணவசதியும்
பெற்று மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு நடத்துவர். ஆபரண சேர்க்கை தகுதிக்கேற்ப
கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், கூடுதல் சந்தை வாய்ப்பு கிடைத்து
தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி பெறுவர்.
அரசியல்வாதிகள்:
சாமர்த்தியமாக செயல்புரிந்து அரசியலில் தனக்கென சிறப்பிடம் பெறுவீர்கள்.
ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் நடந்து கொள்வர். எதிரிகள் தொல்லை தந்தாலும்
அதனால் பாதிப்பு இருக்காது. பதவிப் பொறுப்பு எதிர்பார்த்த வகையில்
கிடைக்கும். அதிகாரிகளிடம் முன்வைக்கும் கோரிக்கை முறையாக
நிறைவேற்றப்படும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் கூடுதல் மூலதனத்துடன்
வளர்ச்சி பணியை நிறைவேற்றுவர். நம்பகமான பணியாளர்களின் உதவி பலமாக
கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான
அம்சங்கள் அனுகூலமாக அமையப் பெறுவீர்கள். மகசூல் எதிர்பார்த்த வகையில்
கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் வருட முன்பகுதியில் அபிவிருத்தியும்,
வருமானமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் திட்டம் நிறைவேறும்.
வருடபிற்பகுதியில் பணவரவு குறையும்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் பணவரவு கூடும்.
செல்ல வேண்டிய தலம்: சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில்
பரிகாரப் பாடல்:
அஞ்சல் என்று அருளும் அன்பே போற்றி
தஞ்சம் என்பவரைச் சார்வோய் போற்றி
பங்கயத்து உறையும் பாவாய் போற்றி
செங்கண்ணன் மார்பில் திகழ்வோய் போற்றி