பெண்ணே! விடுமுறை நாட்களில் என் ஊருக்கு வந்த நீ! விடுமுறை முடிந்து உன் ஊருக்குச் செல்கிறாய்! வழியனுப்ப வந்த உறவினர்களுள் ஒருவனாய் இரயிலின் ஓரத்தில் நானும் நின்றிருக்கிறேன்!
எப்போதும் உற்சாகமாய் இருக்கும் நீ, இன்று என்னை கண்டும் காணாதது போல்! கலங்கிய கண்களுடன் இரயிலின் உள்ளே அமைதியாக அமர்ந்திருக்கிறாய்! உன்னை பார்த்துக் கொண்டும், நீ பார்க்கும் போது பார்க்காதது போல நடித்துக் கொண்டிருக்கிறேன் நான்!
எல்லோரிடமும்! "ஊருக்கு ஒருநாள் வாங்க!" என்று சொன்ன நீ ! என்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை! உன் மனதை விட்டு பிரிந்தால் தானே! மீண்டும் உன் ஊருக்கு வருவதற்க்கு!
உன்னுடன் பயணிக்கும் எல்லோருக்கும் கையசைத்து விடை சொல்லி! "திருவிழாவுக்கு கண்டிப்பா வாங்க" என்று சொன்ன நான் உன்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை! என் மனதை விட்டு பிரிந்து சென்றால் தானே மீண்டும் உன்னை அழைப்பதற்கு! நம் பிரிவை எண்ணி கூ.....என அலறி அழுது கொண்டு தட.. தட....வெணும் இதயத் துடிப்புடன் மெதுவாக நகர்கிறது இரயில் வண்டி!
ஜன்னல் கம்பியில் கன்னம் பதித்து என்னைப் பார்த்தபடி நீ! ரயிலுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே உன்னைப் பார்த்தபடி நான்!
என் இதயத்துடிப்ப்பை போல ரயிலின் வேகமும் அதிகரிக்க! என்னை கடந்து சென்ற ரயிலை நின்றபடி பார்த்துகொண்டிருந்தேன்! ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த உன் மனம், என்னுடன் நின்று கொண்டிருந்தது! நின்று கொண்டிருந்த என் மனம் உன்னுடன் பயணித்துக்கொண்டிருந்தது!