நீயும் நனைந்தாய் நானும் நனைந்தேன் நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து நடுங்கியது மழை!
*
அடித்து பெய்யும் மழையில் கரைகிறது ஏதாவது ஒரு காதலின் கண்ணீர்!
*
மழை மழையை மட்டும் கொணர்வதில்லை சில நேரங்களில் சில தேவதைகளையும்!
*
நனைந்து சுகித்திருந்த உன்னை அம்மா இழுத்துப் போக சோவென அழத்தொடங்கியது மழை!
*
சைவமான என்னை அசைவமாக்கிப் போகிறது உன் மேல் விழும் மழைத்துளி!
*
மழை உன் அருகாமையில் அருமையாகவும் தூரத்தில் அவஸ்தையாகவும்!
*
மழை வேண்டி வருபவர்களையெல்லாம் விரட்டியடித்தபடி இருக்கிறான் கடவுள்! படிப்பிற்காக வெளியூரிலிருக்கும் உன்னை ஊருக்குள் அழைத்து வரும்படி!
*
ஊரிலிருந்து நீ வருவாயென நேற்றே வந்து வாசல் தெளித்துப் போயிருந்தது மழை!
*
இன்றும் விடாமல் பெய்தபடி நீ என்னைக் குடைக்குள் அழைத்துக் கொண்ட அவ்விரவின் மழை!
*
என் கவிதைகளுக்கு என்ன மேன்மை கிடைத்திடக்கூடும் உன் கையால் மழை நாளில் காகித கப்பல்களாவதைவிட!
*
மழை நின்ற கணத்தின் இலைப்போல் முகமெல்லாம் திட்டுத்திட்டாய் உன் முத்தங்கள்!
*
சிறுமழை பெருமழை எதுவும் மழையை மட்டும் கொண்டுவருவதில்லை உன் நினைவுகளையும்!
*
நம் உலகில் நான் நீ பின், நமக்கான மழை!
*
நீ மழையாக நான் துளியாக மெல்ல பொழியட்டும் காதல்!
*
முகிலின் நிராகரிப்பு மழை! உன்னின் நிராகரிப்பு என் கண்ணீர்!
*
குழைந்தைகளுடன் நீ நனைந்திருக்க குதூகலமாய் பொழியத் தொடங்கியது மழை!
*
மின்னல் மழையின் கிறுக்கலென்றால் உன் விரல் என்மேல் வரைந்ததை என்னென்பது?!
*
மழை மழையை மட்டும் குறிக்காது காதலையும்!
*
நீ பெண்ணாகவும் நான் ஆணாகவும் ஆனதின் இரகசியம் துலங்கியது ஓர் மழையிரவில்!
*
நீ பெண்ணின் ஓர்துளி நான் ஆணின் ஓர்துளி வா, காதல் பொழிவோம்!
*
என் வேர்கள் காத்திருக்கின்றன உன் மழைக்காக!
*
மழை வானின் ஓர்துளி நீ அழகின் ஓர்துளி! |