நீ…நான்…பின்,நமக்கான மழை… | |
நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன் நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து நடுங்கியது மழை! *
அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது ஏதாவது ஒரு காதலின் கண்ணீர்! *
மழை
மழையை மட்டும் கொணர்வதில்லை சில நேரங்களில் சில தேவதைகளையும்! *
நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா இழுத்துப் போக சோவென அழத்தொடங்கியது மழை! *
சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது உன் மேல் விழும் மழைத்துளி! *
மழை
உன் அருகாமையில் அருமையாகவும் தூரத்தில் அவஸ்தையாகவும்! *
மழை வேண்டி
வருபவர்களையெல்லாம் விரட்டியடித்தபடி இருக்கிறான் கடவுள்! படிப்பிற்காக வெளியூரிலிருக்கும் உன்னை ஊருக்குள் அழைத்து வரும்படி! *
ஊரிலிருந்து
நீ வருவாயென நேற்றே வந்து வாசல் தெளித்துப் போயிருந்தது மழை! *
இன்றும் விடாமல்
பெய்தபடி நீ என்னைக் குடைக்குள் அழைத்துக் கொண்ட அவ்விரவின் மழை! *
என் கவிதைகளுக்கு
என்ன மேன்மை கிடைத்திடக்கூடும் உன் கையால் மழை நாளில் காகித கப்பல்களாவதைவிட! *
மழை நின்ற
கணத்தின் இலைப்போல் முகமெல்லாம் திட்டுத்திட்டாய் உன் முத்தங்கள்! *
சிறுமழை
பெருமழை எதுவும் மழையை மட்டும் கொண்டுவருவதில்லை உன் நினைவுகளையும்! *
நம் உலகில்
நான் நீ பின், நமக்கான மழை! *
நீ மழையாக
நான் துளியாக மெல்ல பொழியட்டும் காதல்! *
முகிலின் நிராகரிப்பு
மழை! உன்னின் நிராகரிப்பு என் கண்ணீர்! *
குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க குதூகலமாய் பொழியத் தொடங்கியது மழை! *
மின்னல்
மழையின் கிறுக்கலென்றால் உன் விரல் என்மேல் வரைந்ததை என்னென்பது?! *
மழை
மழையை மட்டும் குறிக்காது காதலையும்! *
நீ பெண்ணாகவும்
நான் ஆணாகவும் ஆனதின் இரகசியம் துலங்கியது ஓர் மழையிரவில்! *
நீ
பெண்ணின் ஓர்துளி நான் ஆணின் ஓர்துளி வா, காதல் பொழிவோம்! *
என் வேர்கள்
காத்திருக்கின்றன உன் மழைக்காக! *
மழை வானின் ஓர்துளி நீ அழகின் ஓர்துளி! |