அது பெற்றோர்களின் முடிவு
திருமுருக கிருபானந்த வாரியார்
சொற்பொழிவு செய்யுமிடங்களில் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்டு அதற்கு
சரியான பதிலளிக்கும் குழந்தைகளுக்கு சிறிய அளவிலான புத்தகம் ஒன்றை வழங்குவார்.
இந்தப் புத்தகம் பெறுவதற்காக இவரது சொற்பொழிவில் முன் வரிசையில் குழந்தைகள்
கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஒருமுறை பாரதக்கதை சொல்லும் போது "மகாபாரதத்தில்
பண்டவர்களின் கடைசி தம்பியான சகாதேவன் மிகவும் ஞானி, அறிவாளி, புத்திசாலி
என்றார். எப்போதும் வீட்டில் கடைவிப்பிள்ளையாக இருப்பவர்களுக்கு ஞானம் அதிகம்"
என்றபடி கூட்டத்தில் இருக்கும் கடைசிப் பிள்ளைகளெல்லாம் கையை உயர்த்திக்
காட்டுங்கள்" என்றார்.
பல சிறுவர் சிறுமிகள் தங்கள் கையை
உயர்த்தினார்கள்.
உடனே வாரியார் சுவாமிகள், " குழந்தைகளே...!
நீங்கள்தான் கடைசிப்பிள்ளை என்று உங்கள் வீட்டில் நீங்கள் முடிவு செய்ய முடியாது.
அது உங்கள் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முடிவு" என்றார்.
குழந்தைகள் தங்கள் கையைக் கீழே போட கூட்டத்தில்
சிரிப்பொலி அடங்க சிறிது நேரமாயிற்று.
புத்திசாலி மாமனார் முசோலினி
பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன்
சர்ச்சில் மருமகன் ஒரு நடிகர். அவருடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக சர்ச்சில்
அவருடன் பேசிக் கொள்வதில்லை. ஆனால் மருமகனுக்கோ தனது மாமனாருடன் நெருங்கிப் பழக
வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
இருவரும் ஒரு விருந்தின் போது சந்தித்துக்
கொண்டார்கள். இதுதான் தக்க சமயம் என்று நினைத்த அவரின் மருமகன் சர்ச்சிலிடம், "உலகிலேயே
பெரிய ராஜதந்திரரி என்று பெயர் பெற்றவர் யார்?" என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில், " இத்தாலியின் சர்வாதிகாரி
முசோலினி" என்று பதில் அளித்தார்.
இதைக் கேட்டதும் அவரது மருமகனும், மற்றவர்களும்
ஆச்சரியப்பட்டனர்.
"வெறுமனே வேடிக்கைக்காக சொல்கிறீர்கள். முசோலினி
அப்படி என்ன பெரிய ராஜதந்திரியா? என்று கேட்டார் அவரது மருமகன்.
சர்ச்சில் ஆற அமர, "இதிலென்ன சந்தேகம்?
எங்களுக்குள் அவர் ஒருவர்தான் பெரிய புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார். எப்படி
என்று கேட்கிறீர்களா? தன் மருமகனை அவரே சுட்டுத் தள்ளி விட்டார்!" என்றார்.
இதைக் கேட்டதும் அவரது மருமகன் அதிர்ந்து போய்
விட்டார்.
எனக்கு வீரப்பலகாரம்தான் வேண்டும்.
ஒரு முறை சுப்பிரமணிய பாரதியார் பொதுக்கூட்டம்
ஒன்றில் வீராவேஷத்துடன் பேசி முடித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் அவரது பேச்சை
ரசித்துக் கேட்டனர்.
கூட்ட முடிவில் அந்தக் கூட்ட அமைப்பாளர்
பாரதியாரிடம், " தங்களுக்கு என்ன பலகாரம் வேண்டும்? சொல்லுங்கள். பையனை அனுப்பி
வாங்கி வரச் சொல்கிறோம்." என்றார்.
உடனே பாரதியார், "எனக்கு வீரப்பலகாரம் வேண்டும்
வாங்கி வரச் சொல்லுங்கள்" என்றார்.
"வீரப்பலகாரமா? நாம் இதுவரை கேள்விப்படாததாக
இருக்கிறதே?" என்று கூட்ட அமைப்பாளர் குழம்பிப் போனார். அங்கிருந்தவர்களும்
விழித்தனர்.
உடனே பாரதி, "நான் சொல்வது உங்களுக்குப்
புரியவில்லையா? பஜ்ஜி, மெதுவடை, இட்லி போன்ற பலகாரங்கள் எல்லாம் கோழைப்
பலகாரங்கள். பக்கோடா, முறுக்கு, சேவு போன்ற பலகாரங்கள் வீரப் பலகாரங்கள். இவைகளை
வாயில் போட்டதும் "நொறுக்கு நொறுக்கு" என்றும் "கடக்கு முடக்கு" என்றும்
பல்லிற்கு வீரமான வேலை கொடுக்கும் அல்லவா? எனவே இவை வீரப் பலகாரங்கள்தனே?"
என்றார்.
உனக்கு மூளை இல்லை என்று...
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர்
ஸ்ரீ.ஏ.எஸ்.பி.அய்யர். தெய்வபக்தியுடையவர். நகைச்சுவையுடன் நல்ல பேசும்
திறனுடைய இவரை நாத்திக அமைப்பு ஒன்று ஒரு கூட்டத்திற்குப் பேச
அழைத்திருந்தது.
அவர் பேசத் துவங்கியவுடன் ஒருவர் எழுந்து, "எனக்கு
கடவுளிடம் நம்பிக்கை இல்லை" என்று பெருமிதத்துடன் கூறினார்.
உடனே அய்யர், "அதனால் கடவுளுக்கோ,
ஆத்திகர்களுக்கோ நஷ்டம் ஒன்றுமில்லை." என்று கூறினார்.
அய்யரை மடக்க எண்ணிய அவர் சிறிது நேரம் கழித்து
மறுபடியும் எழுந்து, " நம் கண்களுக்குத் தெரியாத எதையும் நம்புவது முட்டாள்தனம்
என்று நினைக்கிறேன்" என்றார்.
உடனே அய்யர், "அய்யா, உன் மண்டைக்குள் இருக்கும்
மூளை என் கண்களுக்குத் தெரியவில்லை. அதற்காக உனக்கு மூளை இல்லை என்று நான்
எடுத்துக் கொள்ள முடியுமா?" என்றார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, கேள்வி
கேட்டவர் வெட்கப்பட்டுத் தலை குனிந்தார்.
எனக்கு எப்படி சதைப் பிடிக்கும்?
செஸ்டர்டன் என்பவர் சிறந்த எழுத்தாளர். சற்று
பருமனான உடலமைப்பு உடையவர். தன் உடல் அமைப்பில் அவரே பெருமையும் பூரிப்பும்
கொண்டவர்.
இவர் ஒரு முறை பெர்னாட்ஷாவிடம் பேசிக்
கொண்டிருக்கும் போது, " நீங்கள் நம் நாட்டிற்கு இழிவைத் தேடிக் கொடுக்கிறீர்கள்.
உங்களைப் பார்க்கும் வெளிநாட்டவர்கள் நம் நாட்டைப் பற்றித் தவறாக
மதிப்பிடுவார்கள்." என்று கூறினார்.
பெர்னாட்ஷா, "ஏன்?" என்று கேட்டார்.
செஸ்டர்டன், "உங்கள் உடலில் சதைப் பிடிப்பே
இல்லை. ஒல்லியான உங்கள் உடலைப் பார்ப்பவர்கள், நம் நாடு பஞ்சமும் பட்டினியும்
கொண்ட நாடு என்று சொல்வார்கள்" என்றார்.
பெர்னாட்ஷாவும் சிரித்துக் கொண்டே, "உண்மைதான்.
ஆனால் என்னுடைய மெலிவிற்குக் காரணம் உங்களைப் பார்த்ததுமே தெரிந்துவிடும்.
அனைத்தையும் நீங்களே சாப்பிட்டுக் கொழுத்து விட்டால் எனக்கு எப்படி சதைப்
பிடிக்கும்? " என்றார்.
இந்தப்பதிலை எதிர்பார்க்காத செஸ்டர்டன் வாயை
மூடிக் கொண்டார்.
|