கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2026-09-10
8:20 AM

Welcome Guest | RSS Main | தொலைந்த மூக்கு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0


தொலைந்த மூக்கு

அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.

ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்

"பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்"

"சரிங்க தாத்தா" - இருவரும்.

விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் "உஷ் உஷ்" என்று கத்தியபடி ஓடினான்.

"அண்ணா என்ன ஆச்சு?" பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

"ஒரு பருந்து வந்தது பார்த்தியா?"

"இல்லையே"

"பெரிய பருந்து"

''அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?"

"அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது"..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.."அம்மா என் மூக்கு..என் மூக்கு" என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். "என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?"

தன் அழுகையை நிறுத்தி "தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை..." மீண்டும் அழுகை...

"அழாமல் சொன்னால் தானே புரியும்..."

"என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்"
நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. "ஓ உன் மூக்கு தானா அது? " என்றார்.
அமைதியானாள் நந்தினி. "நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது."

"இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்.."

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.

"ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்." நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்.."படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்" என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

"ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு...ஜாலி ஜாலி..." மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.
Login form

Search

Calendar
«  புரட்டாதி 2026  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2026 Create a free website with uCoz