அன்னையே தெய்வம்…
தாயே அன்று
உந்தன் மடியில் மறந்து போன
என் எல்லா சோகமும் ஒன்று சேர்ந்து என்னைக்கொல்கிறது
எனைத் தூங்க வைக்க தூரத்தில் நீ என்பதால்
* இந்த உலகில் எந்த மூலையிலும் கிடைக்கவில்லை
உந்தன் கருவறையில் கிடைத்த எனக்கான பாதுகாப்பு
*
என் மேலான உந்தன் கவனத்துக்காகவே
எத்தனை முறை வேண்டுமானாலும்
குழந்தையாய் பிறக்கலாம் உனக்கு நான்
*
எந்தப் பாசப்படியைக் கொண்டு நிறுத்தாயோ தெரியவில்லை
உன் எல்லா குழந்தைக்கும்
ஒரே அளவிலான அன்பையே காட்டுகிறாயே
*
என் தாரத்தின் மறுபிறவியில் உணர்ந்து கொண்டேன்
நான் பிறக்க நீ தாங்கிய பிரசவ வலியை
* உன்னில் தடுக்கி விழுந்தபோதும்
உன் பக்தனாய் அம்மா என உன்னையே அழைத்தபடி விழுந்திருக்கிறேன் நான்
* நான் பார்த்திருக்கிறேன்
உன் கண் வலிக்காக அழாமல்
என் மேல் விழுந்த தூசிக்காய்
நீ கண்ணீர் சிந்தியதை
* அன்று நிலாவைக் காட்டி நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல் உன் கையை தட்டி விட்டிருக்கிறேன்
இன்று நிலாவும் இருக்கிறது சோறும் இருக்கிறது
தூரத்தில் உன் கை அம்மா ரொம்பப் பசிக்கிது
|