ஈரம் காயவில்லை தாய் நிலத்தில் சேய்கள் இழந்த அவலம் தீரவில்லை. ஓலம் ஓயவில்லை.
கூடுகள் கலைந்து கம்பிக் கூட்டினில் முடங்கி,அடங்கி ஒடுங்கிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
அதற்குள் ஓர் தேர்தல் அமர்க்களம். ஆடிய பேய்களின் கோரத் தாண்டவத்தால் ஓடிய குருதியின் ஈரம் காயவில்லை.
உயிர் எனக்கு உடல் உனக்கென உழிக் கூத்தடித்தவர், கூனிக் குறுகி கூட்டமாய் வந்து கும்பிட்ட படி தமிழன் படியேறி தயவாய்ப் பேசி தமக்கே உங்கள் உண்மையான வாக்கினை அளித்திட வேண்டுமென வரம் கேட்கின்றனர்.
வழி பாட்டுத் தலம் வழியே வலம் வந்து பக்தி பரவசக் கூத்தடிப்பு. தொப்பை வயிறும் ஆந்தைக் கண்களும் பேந்தும் பேந்தும் எஞ்சிய தமிழுயிர் தனைக் குடிக்க புடம் போடுகினம்.
சிங்களத்தின் செங் கம்பள விரிப்பில் நடை பயிலும் அம்பலமாகிய யூதாஸ் கூட்டங்கள் ஆட்டம் போட்ட படி எலும்புத் துண்டுக்காய் உமிழ் நீர் வழிந்த படி நாவினைத் தொங்க விட்ட படி வீதிக்கு வீதி வீம்புக்கு அலையுதுகள்.
காட்சிகள் மாறும், மனச் சாட்சிகள் கேள்விகள் கேட்கும். வேள்விகள் தொடராது.