முக்கிய மருத்துவ ஆவணங்கள் இருந்ததா? மைக்கேல் ஜாக்சன் டாக்டரின் கார் பறிமுதல்
திகதி :
Sunday, 28 Jun 2009, [Thamizan]
மயங்கி விழுந்து மரணம்
உலக
பிரசித்தி பெற்ற பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், நேற்று முன்தினம்
தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு
கொண்டு சென்றபோது மாரடைப்பால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மைக்கேல் ஜாக்சன் மயங்கி விழுவதற்கு முன்பாக, ஏராளமான வலி மாத்திரைகளை
சாப்பிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், மைக்கேல்
ஜாக்சனின் பிரத்தியேக மருத்துவ குழுவில் இருந்த டாக்டர் தோமே தோமே
என்பவர், மைக்கேல் ஜாக்சன் மயங்கி விழுந்த வீட்டில் ஒரு போதும்
மாத்திரைகளோ வேறு எந்த மருந்துகளையோ பார்த்தது இல்லை என்றும் லண்டனில்
நடத்த இருந்த நிகழ்ச்சிக்காக முழு உடல் நலனுடன் அவர் இருந்தார் என்றும்
தெரிவித்தார்.
இருதய சிகிச்சை நிபுணர்
கடந்த
திங்கட்கிழமையன்று கூட, நடன ஒத்திகைக்கு சென்றிருந்தார். அதே நேரத்தில்,
மைக்கேல் ஜாக்சன் மயங்கி விழுவதற்கு முன் அவருடைய இருதய சிகிச்சை நிபுணரான
டாக்டர் கொன்ராடு முரே அவருக்கு ஒரு ஊசி போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஜாக்சன் மயங்கி விழுந்த தகவல் கேட்டு விரைந்து சென்ற மருத்துவகுழுவில்
அவர் இருந்தார். மேலும், மருத்துவமனைக்கு ஜாக்சனை கொண்டு சென்றபோதும் அந்த
டாக்டரும் உடனிருந்தார்.
இதையடுத்து கொன்ராடு முரேயிடம் லாஸ்
ஏஞ்சல்ஸ் போலீசார் நேற்று விசாரித்தனர். முதல்கட்டமாக சில கேள்விகள்
மட்டும் அவரிடம் கேட்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை அன்றும் ஜாக்சனை
டாக்டர் கொன்ராடு பரிசோதித்து இருக்கிறார். இந்த தகவல்களை லாஸ்ஏஞ்சல்ஸ்
போலீஸ் துணை தலைவர் சார்லி பெக் தெரிவித்தார்.
எந்த வகை சிகிச்சை
அவர்
மேலும் கூறுகையில், `டாக்டர் கொன்ராடு முரேரியிடம் மேலும் விசாரணை நடத்த
போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அது குறித்து அவரிடம் தொடர்பு
கொண்டனர். எனினும், அடுத்த கட்ட விசாரணை எப்போது நடைபெறும் என்ற தற்போது
கூற முடியாது. அவரிடம் விசாரணை நடத்தினால் தான், மைக்கேல் ஜாக்சன் மரணம்
குறித்த உண்மையான தகவல்களை பெற முடியும்' என்றார்.
அதே நேரத்தில்,
மைக்கே ஜாக்சன் இறப்பதற்கு முன்னதாக எந்த வகையிலான சிகிச்சை அவருக்கு
அளிக்கப்பட்டது என்பது குறித்து அறியும் முயற்சிகளில் லாஸ் ஏஞ்சல்ஸ்
போலீசார் ஈடுபட்டு இருக்கின்றனர்.
டாக்டர் கார் பறிமுதல்
இதற்கிடையே,
டாக்டர் கொன்ராடுக்கு சொந்தமான காரில் ஜாக்சன் மரணம் தொடர்பாக சில
மருத்துவ ஆவணங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, அந்த காரை
போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அதை தீவிரமாக சோதனையிட்டு
வருகின்றனர்.
இதுகுறித்து சார்லி பெக் கூறும்போது, "அந்த காரில்
சில முக்கிய ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்தது. எனினும், எந்த வகையான
ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று கூற முடியாது. ஜாக்சன் மரணமடைந்த
சமயத்தில் அந்த கார் நின்றதால், அதை கைப்பற்றி இருக்கிறோம்'' என்றார்.