உனக்கு என்ன வர்ணம் பிடிக்கும் ? - கேட்டாய் நீ,
உனது கண்ணின் கருவிழியில் தெரியும் மென்மையான கருப்பு;
யோசிக்காமல் சொன்னேன் நான் !!
உனக்கு என்ன பாடல் பிடிக்கும் ? - கேட்டாய் நீ,
உனது பெயரை வரிக்கு,வரி சொல்லும் திரைப்பாடல்தான்;
யோசிக்கவேயில்லை நான் !!
உனக்கு எந்த மொழி பிடிக்கும் ? - கேட்டாய் நீ,
அழகான தமிழ்,நீ பேசும்போது இன்னும் அழகு கூடுவதால்;
யோசிக்க என்ன இருக்கிறது இதில் ?!
உனக்கு எந்த உணவு பிடிக்கும் - கேட்டாய் நீ,
உன்னிடம் இருந்து கற்றுக்கொண்ட சைவ உணவு;
சுவையைப்பற்றியும் யோசிக்கவில்லை !!
உனக்கு எந்த கலைஞனை பிடிக்கும் - கேட்டாய் நீ,
தனது தூரிகையில் அழகாய் உன்னை படைத்த பிரம்மன்னைதான்;
யோசனை எதற்கு இப்பதில் சொல்ல ?!
உனக்கு யாரைப் பிடிக்கும் - கேட்டாய் நீ,
என்றென்றும் உன்னை மட்டும்தான்;
யோசனைக்கே இடமில்லை இக்கேள்வியில் !!
நான் கேட்டேன்.....
என்னை உனக்கு பிடிக்குமா ??
எனது காதல் உனக்கு புரிகிறதா ??
என்னோடு காலமெல்லாம் வாழ்கிறாயா ??
யோசிக்கின்றாய் !!
உனது கேள்விகளுக்கு யோசிக்காமல் பதில் தந்தேன் நான்;
உன்னிடம்தான் எவ்வளவு நீண்ட யோசனை ?!
யோசனையும் அழகு பெறுவது உன்னிடம்தான்;
இதையும் யோசிக்காமல்தான் சொல்கிறேன் !! |