என் பூமியின் புழுதிக் குளியலிலேயே பூப்பின் புனிதம் ஆனது என் தேகம். இப்போ... கந்தக பூமியாய் அது சுடுகாடாய் அது மனிதன் வாழமுடியா மண்மேடாய் அது. பிணக்காடு கடந்து இரத்த ஆறு தாண்டியே விலங்கிட்ட என் தமிழ்த்தாயை தூர நின்று தரிசிக்கிறேன். கண்ணீர் கூட வற்றியவளாய் பேதலித்துப் பிதற்றியபடி.
தோழா கொஞ்சம் நில்...கவனி. பறக்கும் நிலை தவிர். உன் சிறகு முறி. அல்லது மடக்கி வை. எங்களுக்கான இறுதி மணித்துளிகளின் எல்லையில்தான் இன்றைய எம் பயணம். தனியாகப் பறக்கும் சக்தியைக் சற்றுப் புறம் தள்ளு. உனக்கு....இன்று தனித்துப் பறத்தல் அவசியமற்றது. கை கோர்த்துக்கொள். நடப்பது ஒன்றே இப்போதைக்கு எமக்குத் தேவையானது. கொடு உன் தோழமைக் கரத்தை !!!