என் சிந்தையில் மறைந்திருக்கும் தந்தையே ! நீங்கள் உழைத்து கொடுத்த உணவால்தான் என் உடல் வளர்ந்தது ! உணர்ந்து செலுத்திய அக்கறையால்தான் என் உள்ளம் வளர்ந்தது !! எங்கள் நலனுக்காக நீங்கள் பட்ட சிரமங்களின் முன்னால் சிகரங்கள் உயரம் குறைந்தவை ! எத்தனையோ தீபாவளிக்கு எங்களுக்கு மட்டும் புது ஆடை உடுத்தி அழகு பார்த்தவரே ! கோவிலில் உங்கள் பிரார்த்தனை முழுவதும் எங்களுக்காகவே இருக்கும் ! நீங்கள் திட்டுவதெல்லாம் எங்கள் பொறுப்பை உணர்த்துவதற்க்குதான்! நாங்கள் தான் அதை தவறாக நினைக்கிறோம்! என் முன்னால்திட்டினாலும் மற்றவர்கள் முன்னால் விட்டுக் கொடுக்காமல் பேசுபவரே ! ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் அம்மாவிடம் ,அவன் சாப்பிட்டனா? என்று அன்பு விசாரிப்பவரே ! நீங்கள் எனக்கு,நீச்சல் தண்ணீரில் மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை வாழ்க்கையிலும்தான் ! எப்படி வாழவேண்டும்? என்ற கேள்வி எனக்குள் எழாத வண்ணம் ! இப்படித்தான் வாழவேண்டும் ! என்று வாழ்ந்து கொண்டிருப்பவரே ! உழைப்புக்கும், சிக்கனத்திற்க்கும்! பொறுமைக்கும், தூய்மைக்கும் முன் மாதிரியாய் வேறு யாரையும் நான் பார்க்கத் தேவை இல்லை ! உங்களை பார்த்தாலே போதும் ! உங்கள் சொற்களை நான் மீறி இருக்கலாம் ! நீங்கள் காட்டிய நல்ல வழியில் இருந்து கண்டிப்பாக மாறமாட்டேன் ! உங்களை நினைத்து நான் பெருமைப்படும்படி நீங்கள் வாழ்கிறீர்கள் ! என்னை நினைத்து நீங்கள் பெருமைப்படும்படி நிச்சயமாய் நானும் வாழ்வேன் !