மார்பில் வெடிப்பு மறைய…
கானாவாழை
இது மாம்பழ சீசன். அதிகமான அளவில் மாம்பழங்களை பார்த்தவுடன் கணக்கு
தெரியாமல் சாப்பிட்டுவிட்டு வயிற்றுவலி, கழிச்சல், வாந்தி என
கஷ்டப்படுவதுண்டு. மாம் பழம் உண்ணும்பொழுதுபால் அதிகம் சாப்பிடவேண்டும்
என்பது சித்த மருத்துவ விதி. புளிப்புள்ள மாம்பழங்களை உண்ணும்பொழுது
சிறுநீரக கற்கள் தோன்றலாம். பெரும்பாலும் இனிப்பான, நார் அதிகமில்லாத
மாம்பழங்களை உண்பது நல்லது. இல்லையெனில் வயிறு ஊதல், பசி மந்தம், கழிச்சல்
ஆகியன உண்டாகும். ரத்தமூலம் உடையவர்கள் அதிகம் மாம்பழம் உண்பதை தவிக்க
வேண்டும்.
தாய்மைக்கு அங்கீகாரமாக வடிவமைக்கப்பட்ட பெண்களின் மார்பகங்கள்
ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் மறைமுக பணியை செய்கின்றன. மாதவிலக்கின்போது
ஏற்படும் உடல் மாற்றங்களில் மார்பே பெரும்பங்கு வகிக்கிறது. பஞ்சு போன்ற
நீட்சித்தன்மையுடைய சிறப்பு திசுக்களால் ஆக்கப்பட்ட பெண் மார்பகங்களின்
உட்புறத்தில் தாய்ப்பாலை சுரக்கும் லேக்டேடிக் கோளங்கள் குவிந்துள்ளன. இவை
மார்பு நுனியில் தாய்ப்பாலை வெளிப்படுத்துகின்றன.
இலக்கியங்களிலும், பண்டைய மருத்துவ நூல்களிலும் பலவாறு
பெருமைப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் மார்பகங்கள் அழகுக்கு மட்டுமின்றி
தாய்மையின் உணர்வையும், தாய்ப்பாசத்தை ஊட்டவும் பயன்படுகின்றன. ஒரு
சிசுவானது பிறந்து வளர்ந்து சுயமாக உணவு உண்ணும் காலம் வரை தனது
ரத்தத்தையும் சத்தையும், அன்பையும் ஊட்டி வளர்க்க தாய்க்கு உதவுவது
மார்பகங்களே. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்பகங்களில் பலவிதமான நோய்கள்
உண்டாகலாம். மாதவிலக்கின் நிறைவு காலங்களான மெனோபாஸ் காலங்களிலும்
தாய்ப்பால் ஊட்டும் காலங்களிலும் மார்பு நுனியில் சில தொல்லைகள் தோன்
றலாம். மார்பு நுனியில் தோன்றும் தோல் வறட்சி, கிருமித்தொற்று, கொழுப்பு
அடைப்பு, வியர்வை கோள வீக்கம் போன்ற காரணங்களால் மார்பில் வெடிப்பு
உண்டாகலாம். இந்த வெடிப்பு உண்டான மார்பில் சில நேரங்களில் திரவ கசிவும்
தோன்றிவிடும்.
பெண்களின் மார்பு காம்புகளில் தோன்றும் வெடிப்பை முலைக்காம்பு விரணம்
என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உணர்ச்சி நரம்புகள் ஏராளமாக
நிறைந்துள்ள மார்பு நுனியில் விரணங்கள் ஏற்படும்பொழுது முறையான சிகிச்சை
பெறாவிட்டால் திரவ கசிவில் துர்நாற்றமும், அக்குள் பகுதிகளில் வீக்கம்
மற்றும் நெறிகட்டுதலும் உண்டாகும். ஆகவே முலைக்காம்புகளில் வெடிப்பு,
கசிவு ஆகியவை ஏற்பட்டால் உடனே கவனித்து விரணத்தை ஆறச்செய்ய வேண் டும்.
மார்பை சுகாதாரமாக வைக்காததாலும், மார்பு நுனித்தோலின் வறட்சியினாலும்,
உள்ளாடையில் ஏற்படும் கிருமித் தொற்றினாலும், ஈரமான உள்ளாடைகளை அணிவதாலும்
மார்பு நுனியில் வெடிப்பு உண்டாகிறது. அதுமட்டுமின்றி கரப்பான்,
சோரியாசிஸ், பூஞ்சைத் தொற்று, சர்க்கரை நோய் போன்றவற்றிலும் மார்பில்
வெடிப்பு அதிகமாகிறது.
பெண்களின் மார்பு காம்பிலுள்ள துளையில் ஏராளமான பால் சுரப்பிகளும்,
பலவகையான திரவ சுரப்பிகளும் முடிவடைகின்றன. இவை வியர்வை, தாய்ப்பால்
மற்றும் கொழுப்பு கோளங்களுடன் இணைந்து கிருமித்தொற்றினால்
பாதிக்கப்படும்பொழுது மார்பு கசிவை ஏற்படுத்துகின்றன. மார்பு நுனியில்
ஏற்படும் விரணங்களை ஆற்றி தோல் வறட்சியை கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை
கானாவாழை.
கானாவாழை இலைகளை காம்பு நீக்கி மைய அரைத்து, மார்பு நுனியில் தடவி
அதிகாலையில் திரிபலாச்சூரணம் கரைத்த நீரால் கழுவிவர விரணம் ஆறும். இதே
கானாவாழை இலைகளை லேசாக நீர் தெளித்து, இடித்து, சாறெடுத்து சம அளவு
தேங்காய் எண்ணெய் கலந்து மார்பில் தடவிவர விரைவில் ஆறும். கானாவாழை இலை,
வேப்பிலை, மஞ்சள்தூள் மூன்றையும் நன்கு அரைத்து மார்பில் தடவிவந்தால்
வெடிப்பு நீங்கி, கொப்புளம், கசிவு மாறும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்